சிவகாசி நகராட்சி பொத்துமரத்து ஊரணியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

சிவகாசி, செப். 26: சிவகாசி பொத்துமரத்து ஊரணி மற்றும் நீர் வரத்து கால்வாய் பகுதியில் கடைகள், கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து வருவதால் ஊரணி சுருங்கி வருகிறது. ஊரணியில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படைந்து வருகிறது. சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர் நிலைகளில் மழைநீர் கேரிக்கப்பட்டு வந்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்து வந்தது. போர்வெல் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல தெப்பங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டது. இதனால் சிவகாசியில் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள பொத்து மரத்து ஊரணியில் வேன்ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஊரணியில் மரங்கள் அடர்ந்து முளைத்திருந்தன. இதனால் நகரின் மைய பகுதியில் குளிர் தரும் சோலைவனம் போல் ஊரணி இருந்து வந்தது. நகராட்சி முன்னாள் தலைவர் கதிரவன் இந்த ஊரணியில் உள்ள வேன் ஸ்டாண்ட்டை அகற்றி ஊரணியை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

பல லட்சம் மதிப்பில் ஊரணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர் தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே பொத்துமரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தபபட்டது. இதன் பின்னர் பொத்து மரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் ஊரணிக் கரையில் பூக்கடை, டீக்கடை, கோவில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். தற்போது பொத்துமரத்து ஊரணி கால்வாயை ஆக்கிரமித்து கட்டிட பணிகளும் நடைபெற்று வருகிறது.

சிவகாசி நகராட்சி பகுதி குடிநீர் ஆதாராமான பெரியகுளம், சிறுகுளம் கண்மாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரம்பவில்லை. இதனால் சிவகாசி நகரில் கோடை காலங்களில் கடும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழே சென்று விட்டதால் கோடை காலங்களில் போர்வெல் கிணறுகளிலும் நீர் வற்றி விடுகிறது. இதனால் பொதுமக்கள் தற்போது குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் நகரில் உள்ள நிலத்தடி நீர் ஆதார ஊரணிகள், கண்மாய்கள், தெப்பங்களை மீட்டு பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வருதில்லை. பொத்து மரத்து ஊரணியில் நாராணாபுரம், போஸ்காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் ஊரணி மாசடைந்து வருகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: