வாலாஜாபாத், செப். 26: வாலாஜாபாத்தில் சிதிலமடைந்து, சாலை மட்டத்தில் இருந்து பாதாள பள்ளத்தில் சித்த மருந்தகம் செயல்படுகிறது. அந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துaள்ளனர்.வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளிகள், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள், ரயில் நிலையம், சித்த மருந்தகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை ஒட்டி பேரூராட்சி அலுவலகம், நூலகம் அதன் அருகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சித்தா மருந்தக கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது இந்த மருந்தக கட்டிடம் ஆங்காங்கே சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில், தண்ணீர் ஒழுகி, அங்கு ஊழியர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்தக கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்பு உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
சுங்குவார்சத்திரம் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை பொதுமக்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டதால், அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நூலகம், சித்தா மருந்தகம் ஆகிய கட்டிடங்கள் உள்ளன.