புதுக்கோட்டை, செப்.26: மாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கம் குறித்து எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும், அதனை தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் பயனாக உள்ளது என்று கூறினார்.திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையான மாத்தூர் பகுதியில் தொடர் விபத்துகளும், குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் கீரனூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அப்போது வியாபாரிகள், பொதுமக்கள் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மணல் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு இப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.