மன்னார்குடி, செப்.26: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் 10 நாட்கள் நடைபெறும் வருடாந்திர என்சிசி கூட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் என்சிசி வீரர்களின் மாநில தழுவிய கூட்டு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் 10 நாள் வருடாந்திர என்சிசி கூட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.இம்முகாமில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 25 அரசு பள்ளி, 7 அரசு கல்லூரி களில் இருந்து சுமார் 500 தேசிய மாணவர்படை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் துப்பாக்கி சுடுதல், எல்லைகள் மற்றும் வரைபடங்கள் கண்டுபிடித்தல், தனிநபர் ஒழுக்கம், தலைமை பண்பு, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, நதிநீர் தூய்மை, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவை குறித்து என்சிசி பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.துவக்க விழா நிகழ்ச்சிக்கு கும்பகோணம் 8வது பட்டாலியன் தேசிய மாணவர் படை கமாண்டர் அதிகாரி லெப் கர்னல் வினோத் தலைமை வகித்தார். கல்லூரியின் என்சிசி அலுவலர் லெப் ராஜன் வரவேற்றார்.