ராசிபுரம், செப்.25: வெண்ணந்தூர் அருகே, திருமணி முத்தாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு செல்கிறது. இதில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு வழியாக சென்று நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. நேற்று முன்தினம் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் திருமணி முத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மதியம்பட்டி செளரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.