பரமத்திவேலூர், செப்.25: மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 71 பேருக்கு, பதவி உயர்வு ஆணையை அமைச்சர் தங்கமணி வழங்கினார். மோகனூரில் இயங்கி வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றும் 8 பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு, பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பதவி உயர்வு ஆணையை வழங்கி பேசுகையில், ‘தமிழக முதல்வர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால், விவசாயிகளின் நலன் உயர வேண்டும் என மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.