கம்பம், செப். 25:கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஹோட்டல்களில் அஜினமோட்டோ பயன்பாடு மிக அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களான கூடலூர், புதுப்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் உணவு பொருட்களில் அதிகளவில் சுவை கூட்ட பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ என்ற ரசாயனம் கலக்கப்பட்டு ஹோட்டலில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும் எனவும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத் துறையினர் எவ்விதமான ஆய்வுகளிலும் ஈடுபடாமல் வெறுமனே தங்களது பொழுதை கழிக்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.