நாகர்கோவில், செப்.25 : நாகர்கோவிலில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த போது, சாலையில் கிடந்த பள்ளத்தை கற்களை போட்டு சீரமைத்த எஸ்.ஐ.க்கு எஸ்.பி. ஸ்ரீநாத் பாராட்டு தெரிவித்தார். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதால் மாநகரம் முழுவதும் சாலைகள் படுமோசமாக உள்ளன. உள்ளூர் சாலைகள் மட்டுமின்றி மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருவதால், குண்டு, குழிகளில் பைக்கில் வருபவர்கள் விழுந்து, விபத்தில் சிக்கி வருகிறார்கள். நாகர்கோவில் - ஈத்தாமொழி விலக்கு சந்திப்பில் கோட்டார் பகுதியில் சாலையோரம் பெரிய பள்ளம் கிடந்தது. இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி பைக்கில் வருபவர்கள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த நாகர்கோவில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பைக்கில் வருபவர்கள் படும் அவஸ்தையை நேரில் பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் அவராகவே தன்னந்தனியாக அந்த பகுதியில் ரோட்டோரத்தில் கிடந்த கற்களை தேடி எடுத்து வந்து பள்ளத்தில் போட்டு நிரப்பினார்.