நாகர்கோவில், செப்.24: மண்டைக்காடு அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 463 கோரிக்கை மனுக்கள் நேற்று பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.