நீடாமங்கலம்,செப்.20: நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து 10 நாட்களாக கழிவுநீரில் கலக்கிறது.இதனால் மக்கள் நோயில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேதாரண்யம் கூட்டு குடிநீர் கொள்ளிடத்திலிருந்து சுத்திகரித்து பம்பு செய்து பாபநாசம்,வலங்கைமான்,நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக சாலைகளில் மையப்பகுதிகளிலும்,தரை தள நீர் தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வேகத்தை அதிகப்படுத்தப்படுகிறது.சாலை ஓரங்களிலும் குழி தோண்டி சிமென்ட் குழாய்கள் அமைத்து வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடி நீர் வழங்கப் படுகிறது.குடிநீர் செல்ல சாலைகளில் சிமென்ட் குழாய்கள் அமைத்து தண்ணீர் செல்வதால் கனரக வாகனங்கள் செல்வதாலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்படும் தொடர் கதையாக உள்ளது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் வடபுறம் ஒரத்தூர் வடிகால் வாய்க்கால் அருகில் சிமென்ட் குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் கடந்த 10 நாட்களுக்கு முன் உடைந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கழிவு நீரில் குடிநீர் கலக்கிறது.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ,அலுவலர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.