வேதாரண்யம், செப்.17: வேதாரண்யம் சி.க.சு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதையொட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சி.க.சு பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார்.
விழாவில் பள்ளியின் வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரகாஷ், கவிஞர் புயல்குமார், அதிராம்பட்டினம் காதர் முகைதீன், கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர், பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள் அம்பாள் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வழி வகுத்த 14 ஆசிரியர்களை பாராட்டி வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கினார். தொழில் கல்வி ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.