வலங்கைமான், செப். 15: வலங்கைமான் தாலுகாவிற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மாற்று இடம் தரும் விதமாக டிஆர்ஓ நேரில் ஆய்வு மேற்கொண்டார். வலங்கைமான் தாலுக்காவிற்கு உட்பட்ட வடக்குபட்டம், தென்குவளவேலி உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் பல ஆண்டுகளாக நீர் நிலை புறம் போக்குகளான வாய்க்கால் புறம் போக்கு மற்றும் ஆற்று புறம் போக்குகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக அரசின் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்போது அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இருப்பினும் வீட்டு மனை பட்டா இல்லாததால் மத்திய மாநில அரசுகளால் பல்வேறு கால கட்டங்களில் செயல்படுத்தப்படும் வீடு வழங்கும் திட்டத்தின் பயன் வாய்ப்பில்லாமல் போனது.