சின்னமனூர், செப்.11: சின்னமனூர் பகுதிகளில் முதல்போகம் நெல் நடவிற்கு இயந்திரம் மூலம் நாற்றாங்கால் நெல் விதை பாவிடும் பணிகளை வேளாண்மை துறையினர் துவக்கினர். பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூலை 29ம் தேதி வினாடிக்கு 900 கன அடி வீதம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் 16,452 ஏக்கர், மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் 26,792 ஏக்கர் உள்பட 45,041 ஏக்கருக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கம்பம்பள்ளத்தாக்கு பகுதிகளில் 25 நாட்களில் வளர்ந்து நெல் நாற்றாக வருவதற்கு வயல்வெளிகளை பண்படுத்தி புரட்டிப்போட்டு நாற்றாங்கால் பாவிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சின்னனமனூர் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கர் வயல்வெளிகளிலும் விவசாயிகள் நாற்றாங்கால் பாவி வருகின்றனர். அதன்படி வேம்படிகளம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சின்னமனூர் வேளாண்மை துறையினர்கள் நேற்று இயந்திர நடவிற்காக நாற்றாங்கால் பாவிடும் பணியினை துவக்கினர். இயந்திர நடவிற்கான பாய் நாற்றாங்கால் பாவிடும் பணி கருங்கட்டான் குளம் பகுதியில் மேற்கொண்டனர்.