இளையான்குடி, செப். 11: உலக கோப்பை கபாடி வீரர் படித்த சாலைக்கிராமம் அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. காலிப் பணியிடத்தை நிரப்ப, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா, சாலைக்கிராமம் அரசுப் பள்ளி, கடந்த 1961ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1979ம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இளையான்குடி ஒன்றியத்திலேயே முதல் அரசு மேல்நிலைப் பள்ளியாக செயல்படும் இந்த அரசு பள்ளியில், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களே அதிகளவில் பயின்று வருகின்றனர். சிறப்பாக செயல்படும் என பெயரெடுத்த இந்த பள்ளியில், விளையாட்டு என்பது இன்றைய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. காலியிடமாகவே இதுநாள்வரை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் மாவட்ட அளவில் விளையாடி பரிசுகள் வாங்கி வந்த இந்த பள்ளி மாணவர்கள், தற்போது ஒன்றிய அளவில்கூட கலந்துகொள்ள முடியவில்லை. தேவையான தகுதிகள் இருந்தும் முறையான பயிற்சி, ஊக்குவிப்பு இல்லாததால் தகுதியுள்ள கிராமப்புற மாணவர்கள் வகுப்பறை பாடத்திலேயே முடங்கிப்போயுள்ளனர். போலீஸ், ராணுவம், உட்பட பாதுகாப்புத்துறையில் சேர்வதாக கனவு காணும் மாணவர்களின் நிலை சிதைந்து போகும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளியில் கடந்த நான்கான்டுகளாக விளையாடவும், மைதானம் பக்கம் செல்லவும் ஆசியர்கள் அனுமதிப்பதில்லை. போலீஸ், ராணுவம் உட்பட பாதுகாப்புத்துறையில் சேர்வதாக கனவு காணும் மாணவர்களின் எதிர்கால கனவுகளை, கல்வித்துறை அதிகாரிகள் சிதைத்து வருவதாக முன்னாள் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.