பெ.நா.பாளையம், செப். 11: கோவை அடுத்த துடியலூரில் உள்ள வார சந்தையில் ஒரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை அடுத்த துடியலூர் பஸ் நிலையம் அருகே ஒவ்வொரு திங்கட்கிழமையும் வார சந்தை நடக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையக்கூடிய காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதேபோல் கால்நடை சந்தையும் நடக்கிறது. இந்த சந்தையின் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு குப்பைக் கழிவுகளை தரம் பிரிக்கும் பணி நடக்க இருப்பதால், சந்தையின் தன்மை கெட்டுவிடும் என்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை செய்து வருவதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று மாலை துடியலூர் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ., துணை செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார்.