குளித்தலை, செப். 11: குளித்தலையில் 24 வார்டுகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகர சிவ சேனா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் குளித்தலை காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:குளித்தலை நகர பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் காவேரி நகர், அண்ணா நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகள் விஸ்தரிப்பு பகுதிகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக குளித்தலை நகர பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், பெண்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இதுபோன்று தொடர் திருட்டு சம்பவம் சம்பவங்களை இனிமேல் தொடராமல் இருக்க குளித்தலை நகரப்பகுதியில் உள்ள இருபத்திநான்கு வார்டுகளிலும் ஆங்காங்கே புறக்காவல் நிலையங்கள் போல் அமைத்து இரவு நேரங்களில் தெருக்களில் காவலர்கள் ரோந்து செல்ல உடனே நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.