தோகைமலை, மார்ச் 29: கரூர் மாவட்டம் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் உத்தரவின்பேரில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 24 மணிநேரம் வாகனத்தனிக்கை செய்வதற்கு பல்வேறு குழுக்கள் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் பேரில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் வாகனத்தணிக்கை செய்யும் பணிகளை தீவிரமாக கண்கானித்து வருகின்றனர்.
இதில் 4 சக்கர வாகனங்கள், சந்தேகிக்கும் வகையில் இருந்தால் ஆம்புலன்ஸ், பால்வண்டி, இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட ரூ. 50 ஆயிரத்திற்கும் கூடுதலாக பணம் கொண்டு வரப்படுகிறதா? அல்லது வேரேதும் பரிசுபொருட்கள் கொண்டுவரப்படுகிறா? என்று ஒவ்வொரு வாகனமாக ஆய்வு செய்து வருகின்றனர். குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சின்னரெட்டிபட்டி மற்றும் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரி பிரிவு ரோடு அருகே மாவட்ட எல்லை செக்போஸ்டில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் பறிமுதல் செய்து பறக்கும்படை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
