நாகர்கோவில், செப்.11 : குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள லோக் அதாலத் குறித்து, அரசு பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை நீதிபதிகள் ஒட்டினர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. புகார்தாரர், எதிர்மனுதாரர்கள் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது.இதில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது. நீதிபதிகள் முன்னிலையில் நேரடியாக பேசி தீர்வு காணப்படும். இந்த லோக் அதாலத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் நீதிபதிகளே நேரடியாக இறங்கி உள்ளனர்.அந்த வகையில், வருகிற 14ம் தேதி லோக் அதாலத் நடத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகிய 5 நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடக்கிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கோமதி நாயகம், அரசு பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.