செய்யூர், செப். 10: இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு நல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நேற்று கடப்பாக்கத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நல்லூர் கிராம மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி திமுக கிளை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திமுக பேரூராட்சி செயலாளர் இனியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், வட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.