நாகர்கோவில், ஆக.22 : குமரி வேளாண் விற்பனை குழுவுக்கு சந்தை கட்டணம் செலுத்தாமல், முந்திரி பருப்பு ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அபராத ெதாகையுடன் சேர்த்து ₹50,235 வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன் உத்தரவின் பேரில், மூத்த விற்பனை கூட கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் கண்காணிப்பாளர்கள் ராஜசேகரன், கேப்டன் வளன், மேற்பார்வையாளர் சிதம்பரம் மற்றும் விற்பனை குழு அலுவலர்கள் கொண்ட குழுவினர் குழித்துறையில் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக முந்திரி பருப்பு ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில் சோதனை நடத்தினர். இதில் ரூ.49 லட்சத்து 23 ஆயிரத்து 503 மதிப்பிலான முந்திரி பருப்பு, திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து, கொல்லத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு எடுத்து செல்லப்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் கன்னியாகுமரி விற்பனை குழுவுக்கு சந்தை கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெறாமல் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்தை கட்டணம் (அபராத தொகையுடன்) ரூ.50ஆயிரத்து 235 நிறுவன உரிமையாளர் செலுத்தினார்.இதையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது. மேலும் தேங்காய் விளைபொருள் ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் நடந்த சோதனையில், சந்தை கட்டணம் மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.4,500 வசூலிக்கப்பட்டது.