அருமனை, ஆக.22: பேச்சிப்பாறை சீரோபாயின்டில் நேற்று 2 ஆலயம் மற்றும் 44 ஆக்ரமிப்பு வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.பேச்சிப்பாறை சீரோபாயின்ட் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது பேச்சிப்பாறை அணையில் சாய்வணை கட்டும் பணிகள், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் அணையின் கீழ்பகுதியில் அரசு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த வீடுகளை இடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை அனைத்து கட்சிகள் சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.இந்த நிலையில் நேற்று காலை தக்கலை சப்-கலெக்டர் சரண்யா அறி மேற்பார்வையில் தாசில்தார்கள், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீரோபாயின்ட் பகுதிக்கு வந்தனர். பின்னர் ஆக்ரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மின் வாரிய ஊழியர்கள் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்து மின் மீட்டரை அகற்றினர்.