ராஜபாளையம், ஆக. 20: ராஜபாளையம் வட்டாரத்தில் மண்வள அட்டை இயக்கம் 2019-20ன் கீழ் மண்வள அட்டையை பயன்படுத்தி உரமிடுதல் திட்டத்தின் ஜமீன் கொல்லங்கொண்டான் மாதிரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளின் நிலத்திலும் ஜுன் 2019ல் மண் மாதிரி எடுக்கப்பட்டு மண் ஆய்வு செய்யப்பட்டது. மண் ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மண்வள அட்டை தயார் செய்யப்பட்டது. ஜமீன் கொல்லங்கொண்டான் மாதிரி கிராமத்தில் நடந்த சிறப்பு பயிற்சியில் மண்வள அட்டையை பயன்படுத்தி உரமிடுதல் சம்பந்தமான பயிற்சி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜபாளையம் சுப்பையா தலைமை வகித்து உரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு, (விருதுநகர்) மண்வள அட்டையை பயன்படுத்தி உரமிடுதல் பற்றி சிறப்புரையாற்றினர். வேளாண்மை அலுவலர் தனலட்சுமி பயிருக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் நுண்ணீர் பாசணத் திட்டம் பற்றி எடுத்துக்கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜீவா மற்றும் சுரேஷ் செய்திருந்தனர்.