கும்பகோணம், ஆக. 20: கும்பகோணத்தில் 10 ஆண்டுகளாக ரேஷன் கார்டு பெண் அழைந்து வருகிறார். ரேஷன் கார்டு இல்லாததால் அவரது பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கும்பகோணம் அடுத்த கொத்தங்குடியை சேர்ந்தவர் இளையராஜா. 2010ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு உஷா (35) என்ற மனைவியும், நீலத்தநல்லூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி (13) மற்றும் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் நிஷா (12) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கணவனை இழந்த உஷாவுக்கு உறவினர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கொத்தங்குடியில் சாலையோர புறம்போக்கு இடத்தில் கூரை வீட்டில் மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். வறுமை காரணமாக உஷா, செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தனது மகள்களை பள்ளியில் சேர்ப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் ரேஷன் அட்டை கேட்டது. அப்போது உஷாவின் கணவர் இறந்ததால், பள்ளி நிர்வாகம் பள்ளியில் சேர்த்து கொண்டது.கடந்த 10 ஆண்டுகளாக வட்ட வழங்கல் அலுவலகத்துக்கும், மக்கள் குறைதீர்க்கும் நாட்களிலும் மனுக்கள் அளித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி இன்னும் வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் 10 ஆண்டுகளாக ரேஷன் அட்டை வாங்குவதற்காக கும்பகோணம், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்து அலைந்து சென்று வருகிறார்.