நாகர்கோவில், ஆக.20: வள்ளியூரில் போலீஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்த முன்னாள் பெண் கவுன்சிலர் லீலாபாய் உடல் நாகர்கோவிலில் ஒழுகினசேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயர்மேனாக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் மீது சிறுமி ஒருவரை சில்மிஷம் செய்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் பதுங்கியிருந்ததாக கூறப்படும் குமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் லீலாபாய் (45), என்பவரது வீட்டிற்கு வந்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கிறிஸ்டோபர் இல்லாததால் அங்கிருந்த லீலாபாயை அழைத்து சென்று வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் வள்ளியூர் குற்றவியல் நீதிபதி அலீமா முன்னிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லீலாபாய் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து அவரது உடல் அங்கு நின்றிருந்த அவரது மகன் வினில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட வில்லை. இரவோடு இரவாக நாகர்கோவில், ஒழுகினசேரியில் பழையாற்றின்கரையில் உள்ள சுடுகாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு 10.05 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.