காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்தில், இன்ஸ்பெக்டரை, கலெக்டர் பொன்னையா அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரம் முழுவதும், கலெக்டருக்கு எதிராக ஓய்வுபெற்ற காவல்துறை நலச்சங்கத்தினர் சார்பில், கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போலீசார் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதித்து வருவதால், விஐபி வரிசையில் தினமும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பக்தர்கள், தொடர்ந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிந்ததும், அவர்களை அனுமதித்த இன்ஸ்பெக்டரை கடிந்து கொண்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் கலெக்டருக்கு எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.