தஞ்சை, ஆக. 14: நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த கண்காணிப்பில் உள்ளது. மேலும் ஜம்மு காஷமீரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜியும், முதன்மை பாதுகாப்பு ஆணையருமான அருள்ஜோதி ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்களில் இருந்து ரயில் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பது, ரயில் நிலையம் மற்றும் ஓடும் ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தண்டவாளங்களில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னை குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.