மயிலாடுதுறை, ஜூலை 19: கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிகாரியின் போக்கை கண்டித்து நில உடமைதாரர்கள் வெளிநடப்பு செய்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிச்சாலை ஏற்படுத்த நிலம் கையகப்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகளின் முறையற்ற போக்கை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று கடலூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரி மங்களம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிகாரி பேசும்போது, நிலஎடுப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்தேன். மேலதிகாரிகளின் ஆலோசனையின்படிதான் அனைத்தும் நடந்தது, நிலத்திற்கான விலையை உயர்த்தி அளிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வையுங்கள், என்னால் இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.