திருவாரூர், ஜூலை 18: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக் கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் போன்ற திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் திருவாரூர் மாவட்டத்திற்கு என மொத்தம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் ஜெயின் மதத்தினர் ஆகியோர் இதற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த சிறப்பு முகாமானது குடவாசல் தாலுக்கா அலுலவலகத்தில் இன்று (18ம் தேதியும்), வலங்கைமானில் 25ந் தேதியும், நீடாமங்கலத்தில் அடுத்த மாதம் 1ந் தேதியும், மன்னார்குடியில் 8ந் தேதியும், திருத்துறைப்பூண்டியில் 22ந் தேதியும், கூத்தாநல்லூரில் 29-ந் தேதியும் இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது.