புதுக்கோட்டை, ஜூலை 18: இருப்புப்பாதையில் ஏற்படுகின்றன விபத்துக்களுக்கு ரயில்வே பொறுப்பாகாது என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் காரைக்குடி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் முருகையா தெரிவித்தார்.புதுக்கோட்டை தனியார் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரயில்வே இருப்புபாதையை கடக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் காரைக்குடி தொடர்வண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகையா கலந்து கொண்டு மாணவர்களுக்கு இருப்பு பாதையைக் கடக்கும் வழிமுறை குறித்து பேசினார். அப்போது, இந்திய ரயில்வே 16 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 14,700 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிகளுக்கு மட்டும் 7,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுக்க ஒவ்வொரு நாளும் ரயில்வே அதிக கவனம் செலுத்தி வருகிறது. இருப்புப்பாதை சந்திக்கடவு (லெவல் கிராசிங்) என்பது ரயில்வேக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.1960-1961-ல் 2,342 விபத்துக்கள் நடைபெற்றன. ஆனால் ரயில்வேயின் சிறப்பான முயற்சியால் அது 2017-2018-ல் 105 விபத்துக்களாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மின்சார ரயிலில் ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெறுகின்றன.