நாகை, ஜூலை 18: நாகை மாவட்டத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.தேங்காய்களின் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்புகூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலையும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது. விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்து தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், குத்தாலம், மயிலாடுதுறை,நாகை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், திருப்பூண்டி ஆகிய எட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.