திருவள்ளூர், ஜூலை 18: குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட புகார் பெட்டியை, போலீசார் திறக்காததால் அதில், துண்டு பிரசுரங்கள் உள்ளன. இதை முறையாக திறந்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், குற்றங்களை தடுக்கும் எஸ்.பி.,யின் திட்டம் வீணாகியுள்ளது.மாவட்டத்தில் விதிமீறி மணல் எடுத்தல், பாலியல் தொல்லை, கஞ்சா விற்பனை, மது விற்பனை, திருட்டு, கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதைத் தெரிவிக்க முடியாத மனநிலையில் பொதுமக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.இதனால், கிராமங்கள் தோறும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், காவல் துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட போலீசார் பொறுப்பாளர்களாக இருந்து, புகார் பெட்டியில் போடப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.மனு அளித்தவர் தொடர்பான விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்க மாட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால், திட்டத்தை துவக்கி 3 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திருவள்ளூர் நகரம் உட்பட எந்த கிராமங்களிலும் புகார் பேட்டி உள்ளதே தவிர, அதை போலீசார் வந்து திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பல கிராமங்களில் கிராம மக்கள் பல்வேறு புகார்களுடன், புகார் பெட்டியை தேடும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.