பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளிப்பு

பூதப்பாண்டி, ஜூலை 18: நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (25). இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு (21) என்பவரை கடந்த 3 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் மஞ்சு வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துராஜ் மஞ்சுவுடன் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூருக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயது மற்றும் 7 மாதத்தில் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முத்துராஜ் வெளியே சென்றுள்ளார். வீட்டில் இருந்து மஞ்சு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இவரது அலறல் சத்தம் ேகட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மஞ்சுவை மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: