மண்டைக்காடு கோயிலில் குழந்தையிடம் நகை திருடியவர் கைது

குளச்சல், ஜூலை 18: கருங்கல் அருகே பூட்டேற்றி ஒளிப்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி கமலபாய்(55). இவர் தனது 2 வயது பேரக்குழந்தை, மகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் மாலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. தீபாராதனையின் போது கமலபாயின் பேரக்குழந்தையின் கையில் கிடந்த ஒருபவுன் தங்க வளையலை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதனால் கோயிலில்  பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கமலபாய் மண்டைக்காடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் குழந்தையின் நகையை நைசாக திருடி செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அவர் சுசீந்திரம் அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(42) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: