சூலூர் ,ஜூன் 27:விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை சூலூர் அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாய நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிய சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுர வழித்தடம் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி பகுதியில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி நடந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பவர்கிரிட் சர்வேயர்கள் அப்பகுதிக்கு வந்தனர். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.