புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தைலமரங்களால் நிலத்தடி நீர் உருஞ்சப்பட்டு வருகிறது. ஏரி, குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுக்கப்பட்டு மழை பெய்தாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் பெருக முடியாத நிலைதான் உள்ளது. ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகள் இருந்திருந்தாலும், தஞ்சை பகுதியை போல மிகுதியான விவசாய வளத்தைக் கொண்ட பகுதியாகும். வானம் பார்த்த பூமியாக இருந்த காலத்தில் இருந்து கம்பு, சாமை, எள், கொள்ளு என செழித்து வளர்ந்த பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 85 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகளைக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலை தற்போது வேறு விதமாக மாறிவிட்டது. புதர்க்காடுகளிலும், மரக்காடுகளிலும் மான், மயில், நரி, முள்ளம்பன்றி, குள்ளநரி, முயல், குரங்குகள் ஏராளம் இருந்துள்ளன. இரண்டரை லட்சம் ஹெக்டேர் புஞ்சையும், ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நஞ்சையும் கொண்ட விவசாயம் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை கடந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. புதுக்கோடடை மாவட்டத்தில் தற்போது வறட்சியின் காரணமாக விவசாயம் மட்டும் அழியவில்லை. புதுக்கோட்டையின் வெப்பமும் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.மாவட்டம் முழுவதும் உள்ள காப்புக்காடுகளில் பெய்யும் மழை நீர் வடிந்து ஏறத்தாழ 6 ஆயிரம் குளங்களை நிரப்பி பாசனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது 6 ஆயிரம் குளங்களும் வறண்டு கிடக்கின்றன. குளம் வறண்டாதால் இந்த குளத்தில் பாசனம் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட விவசாய குடிகளும் வருமானம் இன்றி வறண்டு கிடக்கிறது.