பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூரில் உள்ள பரிசோதனை நிலையத்தில் 404 விதை மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 31மாதிரிகள் தரமற்றது என அறிவித்து விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதைகளின் தரத்தை அறிய விதை பரிசோதனை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் லீமாரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்துக்கான விதை பரிசோதனை நிலையமானது, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிய முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத்தன்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.2019-20ம் ஆண்டுக்கு நடப்பு மாதம் வரை 300 விதை மாதிரிகள் பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 404 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 31 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதை ஆய்வகத்தில் இதுவரை விதை பண்ணையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு விதைச்சான்று துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட 271 விதை மாதிரிகள், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் குவியல்களில் இருந்து விதை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட 96 மாதிரிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் வைத்துள்ள விதை குவியல்களிலிருந்து எடுக்கப்பட்ட 37 விதை மாதிரிகள் என கூடுதலாக 404 விதைமாதிரிகள் பரிசோதனை செய்ததில் தரமற்றது என சான்று விதை 21எண்கள், பணி விதைமாதிரிகள் 10 எண்களும் கூடுதல் 31 மாதிரிகள் தரமற்றது என அறிவிக்கப்பட்டது.