ஈரோடு, ஜூன் 25: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடும், குறுக்கீடும் இல்லாமல் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரையிலான 70 கி.மீட்டர் தொலைவிற்கு ஆற்றின் இருபகுதிகளிலும் பல கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளது.கூடுதலாக பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் நடந்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஆற்றோரம் குழாய் பதித்து குடிநீர் கொடுக்கும்போது விநாடிக்கு 25 கனஅடி என்ற அளவில் தண்ணீர் எடுத்தால் போதுமானதாக இருக்கும். தற்போது குடிநீர் என்ற பெயரில் விநாடிக்கு 200 கனஅடி வீதம், அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 176 கனஅடி முறைகேடாக ஆலை பயன்பாட்டிற்கும், அனுமதியற்ற பாசனங்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக கொண்டு செல்லப்படுகிறது.