மதுரை, ஜூன் 21: ஒத்தக்கடையில் அடிக்கடி எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. குப்பைகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. மதுரை ஒத்தக்கடையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதுதவிர ஓட்டல்கள், டீக்கடைகள், கறிக்கடைகள், திருமண மண்டபங்கள் பல உள்ளன. இவற்றில் இருந்து உருவாகும் குப்பைகள் அப்பகுதியில் உள்ள சுடுகாடுக்கு அருகில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் அதிகம் சேர்ந்ததும், மாநகராட்சி லாரிகளில் எடுத்துச் சென்று வெள்ளக்கல்லில் கொட்டி மக்கும், மக்காத குப்பை என பிரிக்கப்பட வேண்டும். இந்த பணியை மாநகராட்சி மேற்கொள்ள மறுக்கிறதாம். இதனால் குப்பையில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் சிலர் அவற்றில் தீவைத்து விடுகின்றனர்.