மதுராந்தகம், ஜூன் 21: மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த பகுதிகளுக்கான ஜமாபந்தி, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. மொத்தம் 11 நாட்கள் நடந்த ஜமாபந்தி நேற்று முடிவடைந்தது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ஜெயசித்ரா முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டாட்சியர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2,518 மனுக்கள் பெறப்பட்டு, 104 பேருக்கு பட்டா பெயர் மாற்றம், 64 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு குடும்ப அட்டைகள் மற்றும் 125 பேருக்கு சிறு குறு விவசாயிகளுக்கான சான்றுகள் உள்பட 315 பேருக்கு உடனடி தீர்வாக ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 2203 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.