மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில், ஜூன் 19:குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2019ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படவுள்ளது.  15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2018 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மார்ச் 31, 2019 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-19) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற்கொள்ளப்படும். விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் 02.07.2019 மாலை 5 மணி ஆகும்.

Related Stories: