சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வறட்சி பாதிப்பால் குளங்களில் பெரும்பாலும் நீர் இருப்பதில்லை. குளங்களை சுற்றி அரசு சார்பில் அமைக்கப்படும் போர்வெல்கள், வீடுகளில் போடப்படும் போர்வெல்களால் குளத்து நீர் விரைவில் வற்றுகிறது. மாவட்டம் முழுவதும் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் உள்ளன. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. முன்பு குடியிருப்பு பகுதிகள் இல்லாத வயல்வெளி பகுதிகளில் தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகள் தற்போது குடியிருப்பு பகுதி அருகிலேயே தொடங்கப்படுகின்றன. இந்த ஆலைகளில் ராட்சத போர் மூலம் நீர் எடுக்கப்பட்டு பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வேன், லாரிகளில் நீர் எடுத்துச்சென்று கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் அரசு சார்பில் போடப்படும் போர்வெல்கள் சிறிய அளவிலானவையாகும். ஆனால் தனியார் ஆலைகளில் ராட்சத போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ராட்சத போர்களால் ஆலைகளை சுற்றி சுமார் இரண்டு, மூன்று கி.மீ சுற்றுப்பகுதியிலுள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.