மதுரை காவல்நிலையம் அருகே நடந்த வாலிபர் கொலையில் தேடப்பட்டவர் சரண்

மதுரை, ஜூன் 18: மதுரை காவல்நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டவர் நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம் மகன் அஜித்(23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அஜித்தை தல்லாகுளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அஜித், தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 12ம் தேதி கையெழுத்திட இவரும், இவரது அண்ணன் ரஞ்சித்தும் ஒரு டூவீலரில் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே வந்தபோது, அஜித்தை கும்பல் வெட்டிக் கொலை செய்தது. ரஞ்சித்துக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தல்லாகுளம் காவல்நிலையம் அருகே நடந்த இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான மதுரை தல்லாகுளம் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த ரவி முத்தையா மகன் பிரபு (19), நேற்று திருச்சி ஜேஎம் 5 நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாலகிருஷ்ணன், 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பிரபு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: