நாகர்கோவில், ஜூன் 18: கோடை விடுமுறைக்கு பின்னர் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்கின. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் வகுப்புகளில் சேர சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது. இனி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதனை போன்று மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதே வேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் நேற்று தொடங்கின. இதனை தொடர்ந்து மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். சீனியர் மாணவ, மாணவியரால் ஜூனியர்கள் ராகிங் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுதலை தவிர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதனால் கல்லூரிகளில் ஜூனியர் மாணவ, மாணவியரை சீனியர் மாணவ, மாணவியர் வரவேற்கும் வகையிலான நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.