பெரும்புதூர், ஜூன் 18: பெரும்புதூர் அருகே லாரி கேபினில் தூங்கிய லாரி டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (25). லாரி டிரைவர். சென்னை அருகே பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் இவருக்கு நடந்தது.இந்நிலையில், பெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, பொருட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று முன்தினம் பாலசுந்தரம் லாரியில் வந்தார். பின்னர் லாரியை தொழிற்சாலை அருகே நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் பாலசுந்தரம் திடீரென மாயமானார். அப்பகுதியில் இருந்த மற்ற டிரைவர்கள் அவரை தேடியபோது லாரி கேபின் பகுதியில் தலையில் கற்கள் மற்றும் இரும்பு ராடால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர், சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.