திருமங்கலம், ஜூன் 13: திருமங்கலம் நகராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லயன்கள் கிராமபகுதிகளில் தொடர்ந்து உடைப்பதால் குடிநீர் பிரச்னை உண்டாகி வருகிறது.திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூரிலிருந்து பைப்லயன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூர், மதுரை விளாங்குடி வழியாக செக்காணூரணி மீனாட்சிபட்டி வரும் காவிரிநீர் அங்கிருந்து திருமங்கலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திருமங்கலம் நகராட்சிக்கு தினசரி 33 லட்சம் லிட்டர் குடிநீரும், ஒன்றியத்தில் மொத்தமுள்ள 38 ஊராட்சிகளில் 36 ஊராட்சிகளுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீரும் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது. அதேநேரத்தில் திருமங்கலம் நகராட்சியில் மொத்தமுள்ள வீடுகள் 16, 800. இதில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள் 5, 800. இவற்றில் சுமார் 2000 வணிக நிறுவனங்களாகும். தற்போது நகராட்சி மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இதனால் தண்ணீரின் தேவை மேலும் அதிகரிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.