ஓடும் காரில் மனைவியை கொல்ல முயற்சி கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கோவை, ஜூன்13:   கோவை துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (38). இவரது கணவர் அருண்ஜோ அமல்ராஜ். இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சமாதானம் செய்ததால் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அருண்ஜோ அமல்ராஜ் தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஊட்டிக்கு காரில் சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி சென்னைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்த்தியை அருண்ஜோ அமல்ராஜ் அழைத்துள்ளார்.

இதையடுத்து காரில் கணவர், மாமனார், மாமியாருடன் ஆர்த்தி சென்னை புறப்பட்டார். அப்போது ஆர்த்தியை காரில் இருந்து கீழே தள்ளி தள்ளி அருண்ஜோ அமல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்ல முயன்றுள்ளனர். கீழே விழுந்து ஆர்த்திக்கு தலை, கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த காட்சிகளை ஆதாரமாக எடுத்துக்கொண்ட ஆர்த்தி இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அருண்ஜோ அமல்ராஜ் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அருண்ஜோ அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: