தேனி, ஜூன் 11: தமிழகத்தில் 18 ஆயிரம் கூட்டுறவு நிறுவனங்களில் பொறுப்புக்கு வந்துள்ள அதிமுக நிர்வாகிகள், கூட்டுறவு சட்டங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாறினால் பெரும்பாலானோர் வழக்கில் சிக்கும் அபாய சூழ்நிலை நிலவுதாக கூட்டுறவுத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. இதில் இயக்குனர், துணைத்தலைவர், தலைவர் பதவிகளை நியமன அடிப்படையில் பெரும்பாலும் அதிமுகவினரே கைப்பற்றி உள்ளனர். வழக்கமாக திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக பொறுப்பேற்கும் திமுகவினருக்கு கூட்டுறவு சங்க விதிகள், நிர்வாக நடைமுறைகள் குறித்து 15 நாள் முதல் ஒரு மாதம் வரை பயிற்சிகள் வழங்கப்படும். சங்கத்தை எப்படி செயல்படுத்த வேண்டும், இயக்குனர், துணைத்தலைவர், தலைவருக்கு உரிய அதிகாரங்கள் என்னென்ன, எந்த வகையான கடன்களை வழங்க பயனாளிகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பயனாளிகளிடம் பெற வேண்டிய ஆவணங்கள் என்னென்ன, யாருக்கு எந்த வகையில் கடன் வழங்கலாம். கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படும் போதும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து கடன் வாங்கும் போதும், சங்கத்திற்கு தேவையான செலவுகளை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும்.