ஓமலூர், ஜூன் 11: ஓமலூர் அருகே உண்ணாமலைகுட்டை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் ஒன்றியம், சிக்கம்பட்டி கிராமத்தில் உண்ணாமலைகுட்டை ஏரி உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த ஏரியை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இந்த ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டு, வறண்டு காணப்படுகிறது. மேலும், உண்ணாமலை குட்டை ஏரிக்கரையின் வழியாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடந்த 7 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலெக்டர், ஓமலூர் தாசில்தார், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு உட்பட அனைவரிடமும் மனுக்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.