தேன்கனிக்கோட்டை, ஜூன் 11: தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது முத்துராயன்தொட்டி. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக அக்கிராமத்தில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடும் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. படு பாதாளத்திற்கு சென்ற நீர்மட்டதால் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகினர். நீண்ட தூரம் சென்று விவசாய தோட்டங்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.