ஊட்டி, ஜூன் 7: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அரசு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பயிலும் துவக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை இறங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் இது போன்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு தற்போது மூடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 6 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள கன்னரிமந்தனை, கெத்தை, காந்திபுரம், தங்கடு ஓரநள்ளி போன்ற பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கல்வித்துறை அந்த பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வாங்க வற்புறுத்தியுள்ளனர். மேலும், அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பயிலவும் அறிவுறுத்தியுள்ளனர்.